ரோலிங் ஃபோர்க்: அமெரிக்காவின் மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியால் குறைந்தது 26 பேர் மாண்டுவிட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிசிசிப்பியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ரோலிங் ஃபோர்க் நகரம் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துபோய்விட்டது.
இந்நகரில் வாகனங்கள் நசுக்கப்பட்டன; சிதைவுகளால் சாலைகள் களேபரமாகக் காட்சியளிக்கின்றன. ரோலிங் ஃபோர்க்கிற்கு அருகே உள்ள ஷார்க்கி பகுதியில் இயல்புநிலை காணப்பட்டது. எனினும், சூறாவளியால் பல வீடுகள் தகர்ந்துபோயின.
மிசிசிப்பியில் நிகழ்ந்துள்ளதை ஒரு பெரும் துயரச் சம்பவமாக அம்மாநிலத்தின் ஆளுநர் டேட் ரீவ்ஸ் வகைப்படுத்தியுள்ளார். சம்பவம் குறித்த தகவல்களை அவர் டுவிட்டரில் பதிவிட்டு வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
சூறாவளி ஐந்திலிருந்து 10 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தததாக குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர். அந்த நேரத்தில் தங்களின் வீடுகள் பலத்த காற்றால் தகர்க்கப்பட்டதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் சூறாவளி; மிசிசிப்பி, அலபாமாவில் பாதிப்பு

