அசலும் நகலுமாக மெஸ்ஸி
பராகுவே: கத்தார் உலகக் கிண்ண நாயகன் லயனல் மெஸ்ஸியின் முழுஉருவச் சிலை தென் அமெரிக்க காற்பந்து கூட்டமைப்பின் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அர்ஜெண்டினாவை உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வழிநடத்தி 36 ஆண்டு களுக்குப் பின்னர் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் சிலை அவரது வழிகாட்டியும் 1986 உலகக் கிண்ண நாயகனுமான டியாகோ மரடோனாவின் சிலைக்கு அருகே இடம்பெற உள்ளது. திங்கட்கிழமை பராகுவேயின் லூக் நகரில் நடைபெற்ற சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி, 35, தமது உருவச் சிலைக்கு அருகே நின்று புன்னகை பூத்தார். "இப்படி ஒரு சிலை அமையும் என்று நான் கனவுகூட கண்டதில்லை," என்று அவர் வியந்தார்.
காயமடைந்ததால் தலைவர் மாற்றம்
புதுடெல்லி: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் வரும் 31ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. இவ்வேளையில், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் காயமடைந்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரால் பாதிப் போட்டிகளில்கூட விளையாடமுடியாது எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, கோல்கத்தா அணியின் புதிய தலைவர் தொடர்பில் கடந்த சில நாள்களாகவே ஊகச் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில், அவ்வணியின் இடைக்காலத் தலைவராக நிதீஷ் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த பருவத்தில் கோல்கத்தா அணியில் ஆக அதிக ஓட்டம் எடுத்தோர் பட்டியலில் 361 ஓட்டங்களுடன் இரண்டாமிடம் பிடித்தார் ராணா.
டோனி கைகளால் பூத்த நீலம், மஞ்சள்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த
அரங்கான சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறது. அவ்வகையில், அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனியும் அரங்கின் இருக்கைகளுக்கு தெளிப்பானைக் கொண்டு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டார் (படம்). அதனைக் காட்டும் காணொளியைச் சென்னை அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நேற்று (மார்ச் 28) நண்பகல்வரை இக்காணொளி 600,000க்கும் மேற்பட்டோரை ஈர்த்துள்ளது. அவ்வரங்கில் ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை அணி, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்தாட இருக்கிறது. இதுவரை 13 முறை ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ள நிலையில் சென்னை அணி ஒன்பது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது; நான்கு முறை மகுடம் சூடியுள்ளது.

