வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் அதனைத் தணிக்கும் வகையில் சீன உயர் அதிகாரி வாங் யியுடன் பைடன் உதவியாளர் ஜேக் சலவன் பேச்சு நடத்தினார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய மாதங்களாக அதிகரித்து வரும் பதற்றத்தை தணிப்பது குறித்து இருவரும் பேசியதாக நம்பப்படுகிறது.
தைவான் அதிபர் சாய் இங் வென், இரு நாடுகளுக்கு அமெரிக்கா வழியாகச் செல்வதால் சீனாவுக்குக் கோபத்தை ஏற் படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு முன்கூட்டி ஏற்பாடு செய்யப்படாத அழைப்பில் வாங் யியுடன் சலவன் பேசியிருக்கிறார்.
ஆனால் சலவன்-வாங் யிக்கு இடையே நடைபெற்ற உரையாடலை இருதரப்பும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
வெள்ளை மாளிகை பேச்சாளரும் சீனத் தூதர்களும் இது பற்றி கருத்து தெரிவிக்கவும் மறுத்துவிட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கும் இடையே அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்பை பைடன் நிர்வாகம் ஏற்பாடு செய்து வரும் வேளையில் இந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளது.
இந்நேரம் இரு அதிபர்களுக்கு இடையிலான பேச்சு இடம்பெற்று இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சீனா அத்தகைய முயற்சிகளுக்கு பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.
தைவான் அதிபர் சாய் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஏப்ரலில் நாடு திரும்பும் வரை இந்தப் பேச்சு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பைடன் நிர்வாகம் கருதுகிறது.
அமெரிக்காவும் சீனாவும் இருதரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம் முதல் தென் சீனக் கடல் விவகாரம் வரை தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் இருதரப்பு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

