பேங்காக்: பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் பயணிகளின் பையிலிருந்து பணத்தைத் திருடியதாக நம்பப்படும் மூன்று மங்கோலியர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 37 முதல் 51 வயது வரையிலான மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய இயக்குநர் கிட்டிபோங் கிட்டிகாஜோர்ன் தெரிவித்தார்.
இரண்டு ஜப்பானியர்கள், ஒரு தாய்லாந்துப் பெண், ஒரு கனடிய ஆடவர் தங்களுடைய பணப் பையையும் பணத்தையும் காணவில்லை என்று புதன்கிழமை மாலையிலிருந்து வியாழன் காலை வரை புகார்கள் வந்ததாகவும் கண்காணிப்பு கேமராவில் மூவரும் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். காணாமல் போன பணத்தின் மதிப்பு 260,000 பாட் (S$10,000) என நம்பப்படுகிறது.
மூவரும் ஒரு பெண்ணின் உதவியுடன் பணத்தைத் திருடினர். காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

