நியூயார்க்: தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். வெளியிலிருந்து வரும் மிரட்டல்கள், தைவான் உலக நாடுகளுடன் உறவாடுவதைத் தடுக்காது என்று திருவாட்டி சாய் கூறியிருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியைத் திருவாட்டி சாய் சந்தித்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா மிரட்டல் விடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து திருவாட்டி சாய் இவ்வாறு சொன்னார்.
குவாட்டமாலா, பெலீஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது திருவாட்டி சாய் நடுவே அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அந்நாட்டைச் சென்றடைந்தார்.
திருவாட்டி சாயைச் சந்திக்ககூடாது என்று சீனா, அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.
அவர் நாளைவரை நியூயார்க் நகரில் இருப்பார். குவாட்டமாலா, பெலீஸ் நாடுகளிலிருந்து திரும்பும்போது லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கும் செல்வார்; கலிஃபோர்னியா மாநிலத்தில் திருவாட்டி சாய், திரு மெக்கார்த்தியைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆகக் கடைசி நிலவரப்படி இது குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை.
இதற்கிடையே, தைவானும் சீனாவும் கூடுமானவரை தங்களுக்கிடையே போர் மூள்வதைத் தவிர்க்கவேண்டும் என்று முன்னாள் தைவானிய அதிபர் மா யிங் ஜியோவ் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று திரு மா சீனா சென்றார். தைவான் அதிபராக இருந்த ஒருவர் பதவிக் காலத்திலோ அதற்குப் பிறகோ சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறை.

