மணிலா: பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்றில் தீ மூண்டதால் ஆகக் கடைசி நிலவரப்படி ஓர் ஆறு மாதக் குழுந்தை உட்பட குறைந்தது 29 பேர் மாண்டுவிட்டனர். இச்சம்பவம் பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் நிகழ்ந்ததென கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்நாட்டுக்குள் பயணம் மேற்கொள்ளும் 'எம்வி லேடி மேரி ஜாய் 3' என்ற பெயரைக் கொண்ட இக்கப்பலில் தீ மூண்டது.
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு பாசிலான் தீவுக்கு அருகே சம்பவம் நேர்ந்தது. தீ மூண்டபோது கப்பலில் இருந்த பயணிகளில் பலர் அதன் கீழ்த்தளத்தில் இருக்கும் குளிர்சாதன வசதிகொண்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
கப்பலில் மொத்தம் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பதன் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாயின. கப்பலிலிருந்து 36 கப்பல் ஊழியர்கள் உட்பட மொத்தம் 225 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்தது.
தீ மூண்டபோது கப்பலில் இருந்த பெரும்பாலோர் தூங்கிக் கொண்டிருந்ததால் நிலைமை களேபரமாக இருந்ததென தென் மிண்டானாவ் வட்டாரத்துக்கான கடலோரக் காவல்படைத் தலைவர் கொமொடோர் ரெஜார்ட் பார்ஃபே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மூன்று சிறுவர்கள் உட்பட கப்பலிலிருந்து குதித்த 11 பேர் நீரில் மூழ்கி மாண்டதாகவும் 18 பேர் கப்பலில் கறுகிப்போய் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

