நியூயார்க்: தான் இழைத்த தவறு வெளிவராமல் இருக்க முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்குப் பணம் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் தொடர்பில் அவர்மீது குற்றசச்ாட்டுகளைச் சுமத்த அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேன்ஹேட்டன் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர்மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல்முறை. அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் 76 வயது திரு டிரம்ப் தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில் இந்நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
திரு டிரம்ப்பின்மீது சுமத்தப்படவுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. வர்த்தக ரீதியான ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் தொடர்பில் திரு டிரம்ப் 30க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்தது.
தாம் முழுக்க முழுக்க நிரபராதி என்று அறிக்கை ஒன்றில் திரு டிரம்ப் குறிப்பிட்டார். இச்செயல் அரசியல் ரீதியாக ஒருவரை சீரழிப்பதாகும் என்றும் அவர் சாடினார்.
குற்றச்சாட்டுகளை எதிர்த்து தீவிரமாக வாதிடப்போவதாக அவரின் வழக்கறிஞர்களான சுசன் நெஷெலெசும் ஜோசப் டாக்கோப்பினாவும் கூறினர்.
2006ஆம் ஆண்டில் திரு திரு டிரம்ப்புடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லாமல் இருக்க அவர் தனக்குப் பணம் கொடுத்ததாக ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியிருந்தார். யாரும் சட்டத்திற்கு மேலானவர் அல்லர் என்பதை இந்த வழக்கு காட்டுவதாக அவரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தி உட்பட குடியரசுக் கட்சியின் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் திரு டிரம்ப்பிற்கு ஆதரவாக நிற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் அவருக்கு இன்னமும் நல்ல ஆதரவு இருப்பதை இது எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.

