நியூயார்க்: தைவான் நீரிணையில் சீனாவின் ஆகாயப் படை விமானங்கள் போர் காலப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. சீன ஆகாயப் படையின் ஒன்பது விமானங்கள் தைவானின் கடற்பகுதிக்குள் நுழைந்து நேற்று பயிற்சி மேற்கொண்டன.
தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியைச் சந்தித்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று பெய்ஜிங் மிரட்டல் விடுத்திருந்ததைத் தொடர்ந்து ஆகாயப் படைப் பயிற்சி இடம்பெற்றுள்ளது.
ஆகக் கடைசி நிலவரப்படி நியூயார்க் நகரில் இருக்கும் திருவாட்டி சாய், குவாட்டமாலா, பெலீஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பிறகு தைவானுக்குத் திரும்பும் வழியில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் திரு மெக்கார்த்தியைச் சந்திப்பார் என்று எதிர்பார்ப்படுகிறது.
இந்நிலையில், சீனா பதற்றத்தை அதிகரிக்கும் வேளையிலும் தைவான் அமைதியாக இருந்து வந்துள்ளதென திருவாட்டி சாய் முன்னதாகக் கூறியிருந்தார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டார்.

