மட்ரிட்: ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள இயற்கை எழில்மிக்க அஸ்டுரியாஸ் வனப்பகுதிக்கு 90க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்தக் காட்டுத் தீ சம்பவங்கள் வானிலை காரணமாக நிகழவில்லை என்றும் தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்டது என்றும் ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ வைத்தவர்கள் பயங்கரவாதிகளுக்குச் சமம் என்று அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.
அஸ்டுரியா வனப்பகுதியையும் அருகில் வசிப்பவர்களையும் அங்குள்ள உயிரினங்களையும் அழிக்க அவர்கள் இவ்வாறு செய்திருப்பதாக ஸ்பானிய அதிகாரிகள் கூறினர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க 600க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
காட்டுத் தீ காரணமாக அருகில் உள்ள பல நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அருகில் இருந்த சாலைகள், விரைவுச்சாலைகள் ஆகியவை மூடப்பட்டதாக ஸ்பானிய அதிகாரிகள் கூறினர்.
இவ்வாண்டு மேலும் பல காட்டுத் தீ சம்பவங்கள் நிகழும் என்று ஸ்பானிய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இதற்கு தென் ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்டுள்ள வழக்கத்துக்கு மாறான வறண்ட குளிர்காலமே காரணம் என்று கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

