சோல்: அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் கொரிய தீபகற்பத்தில் கூட்டுக் கடற்படை பயிற்சியை நேற்றுத் தொடங்கியதால் வட கொரியா கோபமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போன்ற கடற்பயிற்சி 2022ல் நடைபெற்றபோது ஜப்பானை நோக்கி முதல் ஏவுகணையைப் பாய்ச்சி அது மிரட்டியது.
இரண்டு நாள் நீர்மூழ்கி எதிர்ப்பு, மீட்புப் பயிற்சி தென்கொரியாவின் ஜேஜு தீவுக்கு அருகே உள்ள அனைத்துலகக் கடற்பரப்பில் நேற்று தொடங்கப்பட்டது.
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கிக் கப்பலும் பயிற்சியில் பங்கேற்றது என்று தென்கொரிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
"வடகொரியாவின் நீருக்கடியிலான மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் பயிற்சி தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை ஆற்றலுடன் தயாராக இருப்பதை உறுதி செய்யும்," என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.
ஆனால் இதற்குப் பதிலடியாக அமெரிக்கா அதன் நட்பு நாடுளை அணுவாயுதங்களுடன் தாக்கும் புதிய வடிவமைக்கப்பட்ட போர் ஆயுதங்களுடன் பயிற்சியை மேற்கொள்வோம் என்று வடகொரியாவின் கிம் ஜோங் உன்னின் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வடகொரியா மேற்கொண்ட கடலடி ஊர்தி சோதனையும் அவற்றில் ஒன்று.
இது, கதிரியக்க சுனாமியை ஏற்படுத்தலாம் என்று தென்கொரியா சந்தேகிக்கிறது.
"அமெரிக்காவும் அதற்கு ஏற்ப தலையாட்டும் நட்பு நாடுகளும் போர்ப் பயிற்சி மூலம் ஆபத்தை நெருங்கி வருகின்றன.
"போர் வெறியர்களின் பொறுப்பற்ற செயல்களைத் தடுத்து நிறுத்த எந்த நேரத்திலும் அணுவாயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம்," என்று வடகொரியா எச்சரித்துள்ளது.


