பெய்ஜிங்: அமெரிக்கா, பிலிப்பீன்சில் கூடுதலான ராணுவப் படைகளை நிறுத்துவதால் வட்டார அளவில் பதற்றநிலை அதிகரிக்கும், அமைதியும் நிலைத்தன்மையும் குறையும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. ஒரு தரப்புக்கு மட்டும் பலன்களை அதிகரிக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் சொன்னார்.
தனது ராணுவத் தளங்களில் கூடுதலானவற்றை அமெரிக்கா பயன்படுத்த பிலிப்பீன்ஸ் வழிவகுப்பது குறித்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றிப் பேசினார்.
அமெரிக்கப் படைகள் பயன்படுத்தவுள்ள மேலும் நான்கு ராணுவத் தளங்கள் இருக்கும் இடங்கள் குறித்த விவரங்களை பிலிப்பீன்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றில் ஒன்று தென்சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ளது.
மணிலாவுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே 2014ஆம் ஆண்டில் 'இடிசிஏ' எனும் மேம்படுத்தப்பட்ட தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உருவானது. பிலிப்லீன்சில் உள்ள ஐந்து ராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அந்த ஒப்பந்தம் வகைசெய்தது.
பிறகு ஒப்பந்தம் மேலும் நான்கு ராணுவத் தளங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. எனினும், அந்த நான்கு தளங்கள் இருக்கும் இடங்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாது இருந்தது.
ககாயான் மாநிலத்தில் உள்ள ஒரு கடற்படைத் தளம் மற்றும் ராணுவ விமான நிலையம், இசாபெலா மாநிலத்தில் இருக்கும் ராணுவ முகாம் ஆகியவை அந்த நான்கு ராணுவத் தளங்களில் அடங்கும். மேலும் ஒரு தளம் பலாபாக் தீவில் உள்ளது.
பலாபாக், தென்சீனக் கடல் பகுதிக்குப் பக்கத்தில் உள்ள பலாவான் தீவுக்கு அருகே அமைந்துள்ளது.
பிலிப்பீன்சில் அமெரிக்க ராணுவப் படைகளை அதிகரிப்பது குறித்து சீனா எச்சரிக்கை

