கோலா திரங்கானு: மலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் நாட்டுப் பட்டாசு வெடித்ததில் ஆடவர் ஒருவர் தமது இடது கையை இழந்தார். அதுமட்டுமல்லாது, தமது வலது கையில் பல விரல்களையும் அவர் இழந்தார். பாதிக்கப்பட்ட 27 வயது ஆடவரின் உடலின் மற்ற பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டன. பட்டாசு அவரது கைகளில் இருந்தபோது வெடித்தது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் திரங்கானுவில் உள்ள கிராமம் ஒன்றில் நிகழ்ந்ததாக அம்மாநிலக் காவல்துறை கூறியது.
அந்த ஆடவர் சொந்தமாக நாட்டுப் பட்டாசைத் தயார் செய்துகொண்டிருந்தபோது அது வெடித்ததாக திரங்கானு காவல்துறைத் தலைவர் ரொஹாய்மி முகம்மது இசா கூறினார்.
கடுமையாகக் காயமுற்ற ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டுப் பட்டாசைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை அவரிடம் விநியோகித்தவரை திரங்கானு காவல்துறை வலைவீசித் தேடுகிறது.

