கியவ்: பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் சிறப்பு ராணுவப் படைகள் உக்ரேன் போரில் நேரடியாக ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. போர் தொடர்பில் இணையத்தில் வெளியியான பல ரகசிய ஆவணங்களில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, சென்ற மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி பிரிட்டன், லாட்வியா, பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரேனில் இயங்குகின்றன. அவற்றில் ஆக அதிகமான படைகள் பிரிட்டனைச் சேர்ந்தவை.
சிறப்புப் படைகள் உக்ரேனில் இயங்கும் இடங்கள் குறித்த தகவல் ஏதும் ஆவணங்களில் இடம்பெறவில்லை.
இவற்றோடு, இனி ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதல் மேற்கொள்ளவும் ரஷ்யத் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் உக்ரேனுக்கு ஆற்றல் உள்ளதா என்ற பெரும் கவலை அமெரிக்காவுக்கு இருப்பதும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.
ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கண்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யப் படைகள்மீது உக்ரேன் தாக்குதல் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே உக்ரேன் இதுவரை இவ்வாண்டு மேற்கொள்ளும் முக்கிய ராணுவ நடவடிக்கையாக அமையும்.
உக்ரேன் போர் தொடர்பில் அண்மையில் பல ரகசிய ஆவணங்கள் இணையத்தில் வெளியாயின.
அந்த விவகாரத்தின் தொடர்பில் அமெரிக்கா குற்றவியல் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

