வாஷிங்டன்: ரகசிய ஆவணங்கள் கசிந்தது தொடர்பில் 21 வயது இளையரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
'டிஸ்கார்ட் டெக்ஸ்ட்', 'வீடியோ சாட்' போன்ற செயலிகள் வழியாக சிறிய குழுக்களிடையே ஆவணம் கசிந்தது.
பின்னர் டெலிகிராமில் அவை பரவலாகக் கசிந்தது. இதையடுத்து அனைத்துலக செய்தி நிறுவனங்கள் முக்கிய ஆவணங்கள் கசிந்தது குறித்து அறிந்து கொண்டன. கைது செய்யப்பட்ட ஜேக் டெய்ஸிரா விமானப் படையில் பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை முற்பகுதியில் பேசிய அதிபர் ஜோ பைடன், ஆவணக் கசிவு குறித்து விசாரணை நடைபெறுவதாகக் கூறியிருந்தார்.
"நீதித் துறையும் புலனாய்வு சமூகமும் தற்போது முழு அளவிலான விசாரணையை நடத்திக் கொண்டிருக்கின்றன," என்று அவர் தெரிவித்தார்.
ஆவணங்கள் கசிந்தது பற்றி தமக்குக் கவலையில்லை என்று கூறிய அவர், எப்படிக் கசிந்தது என்பதே கவலை என்றார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது குறித்த அமெரிக்காவின் மதிப்பீடு, உக்ரேனில் அபாயகரமான முறையில் ஏவுகணைகள் தீர்ந்து வருவது, தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள இடைமறிக்கும் சாதனங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆவணங்களில் இடம்பெற்று இருந்தன.
எகிப்து, தென்கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகளையும் அமெரிக்கா வேவு பார்த்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

