சுற்றுலாப் பயணிகளுக்கு வரி: இந்தோ. பரிசீலனை

2 mins read
060992d0-7416-4f2e-8146-f32585d93713
-

ஜகார்த்தா: இந்­தோ­னீசி­யா­வுக்கு வரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கு வரி விதிப்­பது குறித்து அந்­நாட்­டின் அர­சாங்­கம் தீவி­ர­மா­கப் பரி­சீ­லித்து வரு­கிறது.

சமூக ஊட­கங்­களில் வெளி­யான சர்ச்­சைக்­கு­ரிய காணொ­ளி­யைத் தொடர்ந்து வரி விதிக்­கப்­ப­ட­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

கடல் விவ­கா­ரங்­கள் மற்­றும் முத­லீ­டு­க­ளுக்­கான ஒருங் கிணைப்பு அமைச்­சர் லுஹுட் பண்ட்­ஜெய்­டான், விரை­வில் வரி விதிக்­கப்­படும் என்று கூறி­யுள்­ளார்.

இதே­போல சுற்­றுலா, புத்­தாக்­கப் பொரு­ளி­யல் அமைச்­ச­ரான சான்­டி­யாகா உனோ, வரி விதிக்­கும் திட்­டத்தை ஆராய்ந்து வருவ தாக கடந்த திங்­கள்­கி­ழமை தெரி­வித்­தார்.

"இது சரி­யான முடிவா, எந்த அள­வுக்கு வரி விதிக்­க­லாம் என்­பது பற்றி வரு­கிற வாரங்­களில் பரி­சீ­லிக்­கப்­படும். இதன் பிறகு இறுதி முடிவு எடுக்­கப்­படும்," என்­றார் அவர்.

வெளி­நாட்டு சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­கான வரி நாட்­டின் சுற்­று­லாத் தலங்­க­ளை­யும் சந்தை களை­யும் மேம்­ப­டுத்த பயன்­ப­டுத்­தப்­படும் என்று இரு அமைச்­சர்­களும் கூறி­னர்.

சுற்­றுச் சூழ­லைக் கட்­டிக்­காக்­க­வும் கூடு­தல் வரு­மா­னம் பயன் படுத்­தப்­படும் என்று சான்­டி­யாகா தெரி­வித்­தார். ஆனால் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்கு வரி விதித்­தால் எதிர்­ம­றை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­றும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­படும் என்­றும் அத்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இந்­தோ­னீ­சி­யா­வின் குறு, சிறு, நடுத்­தர நிறு­வன சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் எடி மிசேரோ, இந்த விவ­கா­ரத்தை கவ­னத்­து­டன் பரி­சீ­லிக்­க வேண்டும் என்றார்.

"சுற்­று­லாப் பய­ணி­கள் தங்களுடைய இந்தோனீசியப் பயணத்தை ரத்து செய்து விடக் கூடாது, வரி விதிப்­புக்கு நாங்­கள் ஆட்­சே­பம் தெரி­விக்­கி­றோம்," என்­று அவர் கூறினார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் ஹோட்­டல் மற்­றும் உண­வ­கச் சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் ஆலன் யூஸ்­ரான், இத்­த­கைய வரி விதிப்­புக்கு இது ஏற்ற நேர­மல்ல என்று குறிப்­பிட்­டார்.

"கொள்­ளை­நோ­யி­லி­ருந்து நாடு இன்­ன­மும் முழு­மை­யாக மீண்டு வர­வில்லை. இப்­போது வரி விதித்­தால் சுற்­று­லாத் துறை பாதிக்­கும்," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளி ஒன்றில் சட்டை, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வெளிநாட்டுப் பயணி ஒருவர், காவல் அதிகாரியுடன் காரசார மான வாக்குவாதத்தில் ஈடுபடு வதைக் காண முடிகிறது.

பணத்துக்காக தன் மீது குற்றம்சாட்டுவதாகக் கூறிய அந்தப் பயணி பணம் வேண்டுமா என கேட்கிறார். இதே தெருவில் தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்யும் பாலி மக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேட்கிறார். இந்தக் காணொளி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.