கார்ட்டூம் (சூடான்): சூடானில் அந்நாட்டு ராணுவம், தலைநகர் கார்ட்டூமுக்கு அருகே உள்ள துணை ராணுவப் படைத் தளம் ஒன்றின்மீது நேற்று ஆகாயப் படைத் தாக்குதல்களை நடத்தியது. நாட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ராணுவம் தாக்குதலை மேற்கொண்டது.
சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களில் பல வீரர்கள் மாண்டதோடு குறைந்தது 56 பொதுமக்களும் உயிரிழந்துவிட்டனர்.
நேற்று முன்தினம் கார்ட்டூமுக்கு அருகே உள்ள ஒம்டர்மன் நகரில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 'ஆர்எஸ்எஃப்' எனப்படும் துணை ராணுவப் படைத் தளத்தை சூடான் ராணுவம் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே ஆட்சியைப் பிடிக்கப் போட்டி இருந்து வருகிறது.
மோதல்களில் குறைந்தது 56 பொதுமக்கள் மாண்டதைத் தெரிவித்த சூடானின் மத்திய மருத்துவர் குழு, மோதல்களில் ஈடுபட்டோர் உட்பட 595 பேர் காயமுற்றதாகவும் கூறியது. ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் நேற்று முன்தினம் தொடங்கின.
ராணுவ வீரர்கள் பலரும் மாண்டனர். எனினும், அவர்களின் மரண எண்ணிக்கை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

