ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா வட்டாரத்தில் ஒன்பது ராணுவ வீரர்களைத் தாங்கள் கொன்றுவிட்டதாக அப்பகுதியின் பிரிவினைவாதப் போராளிகள் கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்த தங்களின் கோரிக்கைக்கு ஜகார்த்தா பதிலளிக்காததால் நேற்று முன்தினம் இவ்வாறு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், சனிக்கிழமையன்று நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாக இந்தோனீசிய ராணுவம் சொல்கிறது. பிடித்துவைக்கப்பட்டுள்ள விமானி ஃபிலிப் மெர்ட்டன்சைத் தேடும் பணியில் இதர அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக ராணுவப் பேச்சாளர் ஜூலியஸ் விட்ஜோஜோனோ கூறினார்.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.03 மணி நிலவரப்படி ஒருவர் மட்டுமே மாண்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென அவர் குறிப்பிட்டார்.
"அப்பகுதிக்குப் போவது சவாலான ஒன்று. குறிப்பாக பருவநிலையைக் கணிக்கமுடியாமல் இருப்பதால் இந்தச் சூழல் எழுந்துள்ளது. அதனால் இதன் தொடர்பில் வேறு எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை," என்று திரு ஜூலியஸ் சொன்னார். கூடுதலானோர் மாண்டதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பேசினார். திரு மெர்ட்டன்ஸ் பிடித்துவைக்கப்பட்டுள்ள பகுதியை ராணுவம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் திரு ஜூலியஸ் தெரிவித்தார்.
'டிபிஎன்பிபி' எனும் பாப்புவா வட்டாரத்தின் பிரிவினைவாதப் போராளிகள் குழு, நியூசிலாந்தைச் சேர்ந்த திரு மெர்ட்டன்சைக் கடந்த பிப்ரவரி மாதம் கடத்திச் சென்றது. அவரை விடுவிக்க ஜகார்த்தா, பாப்புவா வட்டாரத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கவேண்டும் என்று 'டிபிஎன்பிபி' நிபந்தனை விதித்தது.
பிறகு நிபந்தனையைக் கைவிடத் தாங்கள் தயாராய் இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அக்குழு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தது.
எனினும், சென்ற மாதம் 23ஆம் தேதியன்று இந்தோனீசிய ராணுவமும் காவல்துறையும் பொதுமக்களைத் தாக்கியதாக 'டிபிஎன்பிபி' பேச்சாளர் செபி சாம்பொம் சொன்னார். அதற்குப் பதிலடி கொடுக்கப்போவதாக 'டிபிஎன்பிபி' படைகள் கூறியிருந்ததாகவும் பதிலடி நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

