பேங்காக்: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தாய்லாந்து பொதுத் தேர்தலில் பும்ஜாய்தாய் கட்சி வலுவான நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஞ்சா பயன்பாடு தொடர்பிலான சட்டங்களைத் தளர்த்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்ற வகைசெய்தது இதற்குக் காரணம்.
முன்னாள் கட்டுமான வர்த்தகரான அனுட்டின் சாய்ர்ன்விராக்குலின் தலைமையில் பும்ஜாய்தாய் கட்சி தேர்தலில் களமிறங்கவுள்ளது. நாடாளுமன்றத்தின் கீழவையில் 500 இடங்களில் குறைந்தது 100 இடங்களைக் கைப்பற்றுவது அக்கட்சியின் இலக்கு.
இலக்கை அடைந்தால் தேர்தலுக்குப் பிறகு ஆளும் கூட்டணியில் இடம்பெற பும்ஜாய்தாய் எண்ணம் கொண்டுள்ளது.
இதற்கிடையே, கருத்துக் கணிப்புகளில் தற்போதைய பிரதமர் பிராயுத் சான் ஓசா பின்தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்தல் திரு சான் ஓசாவின் ராணுவ ஆதரவுக் கட்சியான பழைமைவாதக் கட்சிக்கும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவாட்ராவின் மகள் பெய்த்தொங்தார்ன் ஷினாவாட்ராவின் ஃபியு தாய் கட்சிக்கும் இடையிலான போட்டியாக அமையும்.

