மணிலா: தைவானில் வேலை பார்க்கும் 158,000 பிலிப்பீன்ஸ் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திட்டங்கள் வரையப்பட்டிருப்பதாக மணிலா உறுதியளித்துள்ளது.
சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே பதற்றநிலை மோசமடைந்துள்ளது. அந்த அடிப்படையில் சீனத் தூதர் ஹுவாங் ஸிலியேன் வெளியிட்ட கருத்துகளின் தொடர்பில் பிலிப்பீன்ஸ் இவ்வாறு கூறியுள்ளது.
“தைவானில் உள்ள சுமார் 150,000 பிலிப்பீன்ஸ் ஊழியர்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் மணிலா சற்றும் யோசிக்காமல் தைவான் சுதந்திரமடைவதை எதிர்க்கவேண்டும். அதற்குப் பதிலாக தைவான் நீரிணைக்கு அருகே உள்ள ராணுவத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த வகைசெய்து பிரச்சினையைப் பெரிதாக்கக்கூடாது,” என்று திரு ஹுவாங் கூறியிருந்தார். பிலிப்பீன்ஸ்-சீனா உறவு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மணிலாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசினார்.
“பிலிப்பீன்சைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் எல்லா பகுதிகளிலும் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான திட்டங்கள் இருக்கின்றன,” என்று பிலிப்பீன்சின் வெளியுறவு அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
பிலிப்பீன்ஸ், தைவானுடன் அரசதந்திர உறவு வைத்துக்கொள்ளவில்லை. ‘ஒரே சீனா’ கொள்கைக்கு பிலிப்பீன்ஸ் இணங்கி நடப்பது அதற்குக் காரணம்.