கோத்தா கினபாலு: மனைவியை மூச்சு திணறவைத்துக் கொன்ற பிறகு ஆடவர் ஒருவர் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மோசமான தகராறுக்குப் பிறகு மனைவியைக் கொன்றுவிட்டு ஆடவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாகக் கருதப்படுகிறது.
இச்சம்பவம் மலேசியாவின் சாபா மாநிலத்தின் தலைநகர் கோத்தா கினபாலுவில் நிகழ்ந்தது. அந்நகரின் ஜாலான் பன்டாய் எனும் பகுதியில் தம்பதி சத்தமாகத் தகராறில் ஈடுபட்டது அண்டை வீட்டுக்காரருக்குக் கேட்டது.
தம்பதி கடைவீடு ஒன்றின் அறையில் வாடகைக்கு இருந்தனர். அண்டை வீட்டுக்காரர் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அங்குச் சென்று பார்த்தபோது மனைவியின் உடலையும் நினைவிழந்த நிலையில் கணவரையும் கண்டிருக்கிறார்.
காலை எட்டு மணிக்குத்தான் அண்டை வீட்டுக்காரர் தங்களுக்குத் தகவல் தெரியப்படுத்தியதாகக் காவல்துறை கூறியது.
மாண்ட பெண் 20 வயதுகளில் இருந்ததாக கோத்தா கினபாலு காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெண்ணின் 30 வயது கணவர் அவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சிகிச்சைக்காக கணவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

