கார்ட்டூம்: சூடானில் ராணுவத்துக்கும் ஆர்எஸ்எஃப் எனப்படும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே தொடரும் மோதல்களில் குறைந்தது 185 பேர் மாண்டுவிட்டதாகவும் 1,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தலைநகர் கார்ட்டூமில் முக்கிய இடங்கள் தங்களின்வசம் இருப்பதாக ராணுவமும் துணை ராணுவப் படையும் கூறியுள்ளன. அந்நகரில் வெடிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
சூடானில் அமெரிக்க அரசதந்திரக் குழு ஒன்றை நோக்கி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கிறது.
யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஒருவரும் கார்ட்டூமில் இருக்கும் அவரின் வீட்டில் தாக்கப்பட்டதாகவும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சண்டையை உடனடியாக நிறுத்துமாறு வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் கேட்டுக்கொண்டது. சூடானின் ராணுவத் தலைவர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.

