கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ்வுக்கு நேட்டோவின் தலைவர் பயணம் மேற்கொண்டார்.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு அங்கு திரு ஜன்ஸ் ஸ்டோல்டென்பர்க் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை.
தன்மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்க தயாராகி வரும் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த உக்ரேனிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மலர் வளையம் வைத்தார் திரு ஸ்டோல்டென்பர்க்.
அதன் பிறகு, கியவ்வில் உள்ள செயிண்ட் மைக்கல்ஸ் சதுக்கத்தில் உக்ரேனிய வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய கவச வாகனங்களை அவர் பார்வையிட்டார்.
திரு ஸ்டோல்டென்பர்க்கின் உக்ரேன் பயணம் குறித்து உக்ரேனியத் தலைவர்களும் நேட்டோ அதிகாரிகளும் உடனடியாகத் தகவல் வெளியிடவில்லை.
தலைவர்களின் பாதுகாப்பைக் கருதி போர்க்காலங்களில் இத்தகைய பயணங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படுவது வழக்கம். திரு ஸ்டோல்டென்பர்க்கின் கியவ் பயணத்தையொட்டி அந்நகரில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
அவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே, நேட்டோவில் சேர உக்ரேன் விருப்பம் தெரிவித்துள்ளது. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தனது ராணுவ வீரர்களுடன் போரிடத் தொடங்கியதை அடுத்து, உக்ரேனை நேட்டோ அதன் உறுப்பு நாடாக விரைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமியர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, கிழக்கு ஐரோப்பாவில் தனது செல்வாக்கை முடக்க நேட்டோ செயல்பட்டு வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.
திரு ஸ்டோல்டென்பர்க்கின் உக்ரேன் பயணம் குறித்து ரஷ்யா உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை.

