ஜோகூர் பாரு: நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்கும் ஜோகூர் மக்கள் கொவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்க தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
இருப்பினும், அது கட்டாயம் என அறிவிக்கப்படவில்லை.
சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் மக்கள் தொடருமாறு ஜோகூர் சுகாதார மற்றும் ஒருமைப்பாட்டுக் குழுத் தலைவர் லிங் டியன் சூன் தெரிவித்து உள்ளார்.
ஜோகூர் முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தமது அதிகாரத்துவ இல்லத்தில் நடத்திய நோன்புப் பெருநாள் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
"ஜோகூர் மாநிலத்தில் கொவிட்-19 நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும், இந்த விழாக் காலத்தில் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கை அம்சங்களைக் கடைப்பிடிப்பது விவேகமான செயலாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "நோய் எளிதில் தாக்கக்கூடிய அபாயத்தில் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, நோன்புப் பெருநாள் தொடர்பில் நடத்தப்படும் பொது வரவேற்பு நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டம் காணப்படும் என்பதால் அவற்றில் கலந்துகொள்வோர் முகக்கவசம் அணிவது இன்றியமையாதது.
"அவர்கள் அடிக்கடி தங்களது கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்," என்றார்.
ஜோகூர் மாநிலத்தில் கடந்த இரு வாரங்களில் 289 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மட்டும் 13 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

