சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் 'டிஸ்னிலேண்ட்' கேளிக்கை பூங்காவில் எதிர்பாரா விதமாகத் தீ மூண்டது.
சனிக்கிழமையன்று (22 ஏப்ரல்) 'டிராகன்' எனப்படும் தீயைக் கக்கும் கடல் நாகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட 'ஃபன்டேஸ்மிக்' எனும் நிகழ்ச்சியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தீ மூண்டது நிகழ்ச்சியின் ஓர் அங்கம் என்றுகூட பார்வையாளர்கள் சிலர் நினைத்தனர்.
புகையை நுகர்ந்த குறைந்தது ஆறு ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதென அனஹைம் நகரக் காவல்துறை, தீயணைப்புப் பிரிவுகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்குத் தீ மூண்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'ஃபன்டேஸ்மிக்' நிகழ்ச்சி தொடங்கி அரை மணிநேரம் கழித்து தகவல் கொடுக்கப்பட்டது.