மணிலா: ராணுவப் பயிற்சிக்காக பாவனை எதிரிக் கப்பலை அமெரிக்க, பிலிப்பீன்ஸ் படைகள் மூழ்கடித்துள்ளன. இருநாட்டுப் படைகளும் ஏவுகணை பாய்ச்சியும் வெடிகுண்டுகளை வீசியும் அதைச் செய்தன.
அமெரிக்காவும் பிலிப்பீன்சும் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சியின் முக்கிய அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. தென்சீனக் கடலில் அந்த பாவனைப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
தென்சீனக் கடலில் மணிலாவும் வாஷிங்டனும் முதன்முறையாக பாவனைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. அக்கடலின் பல பகுதிகளை சீனாவும் பிலிப்பீன்சும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
'பலிக்கத்தான்' எனும் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியில் பாவனைக் கப்பலாக இடம்பெற்றது செயல்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பிலிப்பீன்சின் 'பிஆர்பி பங்காசினான்' போர்க்கப்பல். ஸம்பாலெஸ் மாநிலத்தின் கரையோரப் பகுதியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அது மூழ்கடிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் நீடித்த கூட்டு ராணுவப் பயிற்சியின் பெரும்பாலான அங்கங்களை பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினெண்ட் மார்க்கோஸ் ஜூனியர் நேரில் பார்வையிட்டார். அவருடன் பிலிப்பீன்சுக்கான அமெரிக்கத் தூதர் மேரிக்கே கார்ல்சனும் பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் கார்லிட்டோ கால்வெஸ் ஜூனியரும் இருந்தனர்.
எனினும், படைகள் பாவனைப் போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்கு முன்பு திரு மார்க்கோஸ் கிளம்பிவிட்டார். அவருக்கு வேறு நிகழ்வில் பங்கேற்க வேண்டியிருந்தது.
பலிக்கத்தான் ராணுவப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 38வது ஆண்டாக நடைபெறும் இதில் பிலிப்பீன்ஸ் அதிபர் கலந்துகொள்வது அரிது.
திரு மார்க்கோஸ் அவ்வாறு செய்தது அவர் முன்னைய பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டேயின் போக்கிலிருந்து மாறுபடுவதை வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. திரு டுட்டார்ட்டே, சீனாவுடன் நட்பு வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காண்பித்தார்.

