கியவ்: உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முட் நகரைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் அங்கு தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ரஷ்யப் படைகள் பக்முட்டில் தொடர்்ந்து குண்டு மழை பொழிவதால் அந்நகரம் நிலைகுலைந்திருக்கிறது.
இருப்பினும், உக்ரேனிய ராணுவ வீரர்கள் பக்முட் நகரிலிருந்து பின்வாங்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பக்முட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரஷ்யப் படைகளுக்கும் உக்ரேனியப் படைகளுக்கும் இடையே மிகக் கடுமையான சண்டை நிலவுவதாக உக்ரேனிய ஆயுதப் படைதெரிவித்தது.
தனது வீரர்கள் எதிர்த்துப் போரிட்டதில் பக்முட்டுக்கு வடமேற்கில் உள்ள இரண்டு கிராமங்களுக்குள் ரஷ்யப் படைகளால் நுழைய முடியாமல் போனதாக அது கூறியது.
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யப் படைகள் பீரங்கிகள், ஏவுகணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 324 தடவை தாக்குதல் நடத்தியதாக உக்ரேனின் கிழக்குப் பகுதிகளைத் தற்காக்கும் ராணுவப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
"பக்முட்டில் உள்ள கட்டடங்களை ரஷ்யப் படைகள் தகர்த்து வருகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் உக்ரேன் ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு அரண்களை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது," என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, போதுமான தோட்டாக்கள் இல்லாத நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக பக்முட்டைத் தற்காத்து ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனிய வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள குபியான்ஸ்க் நகரைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் இதுவரை இல்லாத அளவுக்குத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேனிய ராணுவம் கூறியது.
ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணை உக்ரேனின் மைக்கோலேவ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பையும் தனியார் வீடு ஒன்றையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

