போர்ட் மோரேஸ்பி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாப்புவா நியூ கினிக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவ்வாறு நிகழ்ந்தால் கடந்த நாறு ஆண்டுகளில் பாப்புவா நியூ கினிக்குப் பதவியில் இருக்கும்போது செல்லும் முதல் அமெரிக்க அதிபர் எனும் பெருமை அதிபர் பைடனைச் சேரும்.
ஜப்பானில் நடைபெறும் ஜி-7 உச்சநிலை மாநாட்டிலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் குவாட் உச்சநிலை மாநாட்டிலும் திரு பைடன் கலந்துகொள்கிறார்.
இதற்கிடையே, அவர் அடுத்த மாதம் பாப்புவா நியூ கினிக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்டின் காட்செங்கோ தெரிவித்தார்.
"அதிபர் பைடன் மே மாதம் 22ஆம் தேதி காலை போர்ட் மொரேஸ்பி வந்தடைகிறார். பாப்புவா நியூ கினியில் அவர் மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பார்," என்று அமைச்சர் காட்செங்கோ கூறினார். பாப்புவா நியூ கினியின் தலைவர்களுடன் பொருளியல், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து அதிபர் பைடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, அதிபர் பைடன் தென்கொரியாவுக்கு ஆறு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் கடைசி நாளன்று நடைபெற்ற விழாவில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் ஆங்கிலப் பாடல் ஒன்றைப் பாடி அசத்தினார். அதிபர் யூனுக்கு பாட்டுப் பாடும் திறமை இருப்பது தமக்குத் தெரியாது என்று கூறி அவரைப் பாராட்டினார் அதிபர் பைடன்.

