பெய்ஜிங்: தென்சீனக் கடலில் சீனாவின் கடலோரக் காவல்படைக் கப்பலும் பிலிப்பீன்சின் சுற்றுக்காவல் படகும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மோதவிருந்தன. பிலிப்பீன்சின் சுற்றுக்காவல் படகு கோபமூட்டும் செயலில் ஈடுபட்டதே அதற்குக் காரணம் என்று சீனா கூறியுள்ளது.இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்றும் சீனா சொல்கிறது.
இரு நாடுகளும் பல பதற்றம் நிறைந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ஸ்பிராட்லி தீவுகளுக்கு அருகே இடம்பெற்ற இச்சம்பவமும் அடங்கும்.
பிலிப்பீன்சின் கரையோரக் காவல்படை ஒரு வாரமாக தென்சீனக் கடலில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியரையும் அந்நாட்டின் வெளியறவு அமைச்சரையும் சந்திக்க சீன வெளியறவு அமைச்சர் சின் காங் சென்ற வார இறுதியில் மணிலாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அவற்றைத் தொடர்ந்து தென்சீனக் கடலில் இந்நிலை உருவானது.
பிலிப்பீன்சின் கரையோரக் காவல்படைப் படகுகள் தென்சீனக் கடலில் இருக்கும் செக்கண்ட் தாமஸ் ஷோல் பகுதியை நோக்கிச் சென்றன. செக்கண்ட் தாமஸ் ஷோல், சீனாவில் ரென்'அய் ஜியாவ் என்றழைக்கப்படுகிறது.
பிலிப்பீன்சின் ஒரு படகு அப்பகுதியை நெருங்கியபோது சீனாவின் கடலோரக் காவல்படைக் கப்பல் ஒன்று அதன் பாதையில் வந்தது. பரப்பளவில் பிலிப்பீன்சின் படகில் இரு மடங்கிற்கும் மேலானது சீனாவின் கப்பல்.
ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த பிலிப்பீன்சின் வேறொரு கடலோரக் காவல்படைக் கப்பலில் இருந்த செய்தியாளர்கள் இச்சம்பவத்தைக் கண்டனர். அந்தச் செய்தியாளர்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆண்டுதோறும் அந்தக் கடல் வழியே கிட்டத்தட்ட மூன்று டிரில்லியன் டாலர் (நான்கு டிரில்லியன் வெள்ளி) மதிப்பிலான பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
தென்சீனக் கடலைச் சுற்றியுள்ள பிலிப்பீன்ஸ், வியட்னாம் போன்ற நாடுகளும் அங்குள்ள பல்வேறு பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானவை எனக் கூறி வருகின்றன. அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பெய்ஜிங்கிடம் பிலிப்பீன்ஸ் பலமுறை எடுத்துரைத்துள்ளது.
'பிலிப்பீன்ஸ் சுற்றுக்காவல் படகின் செயல்தான் மோதல் நிகழவிருந்ததற்குக் காரணம்'

