பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று வெப்பத் தாக்கத்துக்குப் பலியானதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் கோத்தா பாருவில் உள்ள கோத்தா எனும் கம்பத்தில் நிகழ்ந்தது.
தனது மகள் முன்னதாக இருமத் தொடங்கியதாகவும் வாந்தி எடுத்து வந்ததாகவும் மாண்ட குழந்தையின் தந்தையான திரு அகமது ஃபாரிஸ் முகம்மது நாசிர் தெரிவித்தார். நூர் இமானி என்ற அவரின் மகள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவரின் வீட்டில் மாண்டதாக சில மலேசிய ஊடகங்கள் கூறின.
இதற்கிடையே, கிளந்தான் மாநிலத்தில் ஒரு 11 வயது சிறுவனும் வெப்பத் தாக்கத்துக்குப் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாச்சோக் வட்டாரத்தில் உள்ள பெருபொக் எனும் கம்பத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சிறுவனின் தாயான திருவாட்டி வானி, திரு அகமது ஃபாரிஸ் இருவரும் தங்கள் பிள்ளைகள் வெப்பத்தாக்கத்துக்கு ஆளானதைப் பிரேதப் பரிசோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியதாகக் கூறினர்.

