கோலாலம்பூர்: தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான் இடையிலான பலவீனமான கூட்டணி அமானா நெகாராவால் நீண்ட காலம் நீடிக்காது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான புவாட் ஸர்காஷி தெரிவித்துள்ளார்.
தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு மாமன்னரிடம் பொதுமன்னிப்புக் கோரும் அம்னோவின் அழைப்பை அமானா நெகாரா நிராகரித்துவிட்டது. இதனால் ஆளும் கூட்டணிக்கு சோதனை ஏற்பட்டுள்ளது என்று அம்னோ கட்சியைச் சேர்ந்த ஜோகூர் மாநில சட்ட மன்ற உறுப்பினருமான புவாட் ஸர்காஷி கூறினார்.
"அமானா கட்சியுடன் நல்ல நண்பர்களாக இருப்பது சிரமம். ஐக்கிய அரசாங்கம் நீண்ட காலம் நீடிப்பதற்கான உத்தரவாதம் அளிக்காத கட்சிதான் அமானா," என்று தமது ஃபேஸ் புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமானா துணைத் தலைவர் சலாஹுதின் அயூப், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நஜிப்பின் பொதுமன்னிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்று சட்ட துறை, தொடர்பு துணை இயக்குநர் காலித் சமத் தெரிவித்திருந்தார்.
இவர்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் புவாட் ஸர்காஷி நேற்று பேசியிருந்தார்.
1எம்டிபியின் முன்னாள் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலின் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கில் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் எட்டு மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். 1எம்டிபி தொடர்பாக அவர் மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

