கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 'பிஎன்' எனும் தேசிய முன்னணியின் உறுப்பினர்கள், ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது தமக்குத் தெரியாது என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் முகம்மது ஹசான் கூறியுள்ளார். அப்படியே அவர்கள் திட்டம் தீட்டினாலும் கட்சித் தாவலுக்கு எதிரான சட்டம் நடப்பில் இருப்பதால் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது கடினமாக இருக்கும் என்றார் அவர்.
"அது கட்சித் தாவல் தடை சட்டத்துக்கு எதிரானது. அவ்வாறு செய்பவர்கள் தயவுசெய்து பதவி விலகுங்கள். ஆனால், இதுவரை யாரும் எங்களுக்கு எதிராகச் செயல்படுவதுபோல் தெரியவில்லை," என்று தேசிய முன்னணியின் துணைத் தலைவரான முகம்மது ஹசான் குறிப்பிட்டார்.

