இஸ்லாமாபாத்: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' எனும் வர்த்தக இணைப்புப் பாதைத் திட்டத்தை ஆப்கானிஸ்தானில் விரிவாக்கம் செய்வது தொடர்பில் தலிபான் அரசாங்கம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் இணக்கம் கண்டுள்ளது.
60 பில்லியன் டாலர் ($80 பில்லியன்) மதிப்பிலான சீன-பாகிஸ்தான் பொருளியல் பாதையை ஆப்கானிஸ்தானில் விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு மறுகட்டுமானப் பணிகள் தொடர்பில் சீனாவும் பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானுக்கு உதவியை உறுதிசெய்துள்ளன.
முன்னதாக, ஆப்கானிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாக்கி மீதான அனைத்துலகத் தடையில் இருந்து பாகிஸ்தான் பயணத்துக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அவர் இஸ்லாமாபாத்திற்கு நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
அங்கு பாகிஸ்தானிய, சீன வெளியுறவு அமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் பெண்கள் மீது விதித்துள்ள தடைகளுக்கு அனைத்துலக அளவில் கண்டனக் குரல்கள் ஒலிக்கும் நிலையில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பையும் பொருளியல் நிலைத்தன்மையையும் மேம்படுத்த அந்நாட்டிற்கு உதவும் வழிகள் குறித்து சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதாக ஊடகங்கள் கூறின.
அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம், அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு, மிதமான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும்படி ஆப்கானிஸ்தானை கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தானிய, சீன வெளியுறவு அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். ஆனால் பக்கத்து நாடுகளின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதும்படி ஆப்கானிஸ்தானிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

