கியவ்: உக்ரேன் தலைநகர் கியவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியது. கியவ்வை நோக்கி ரஷ்யா ஏறத்தாழ 15 ஏவுகணைகளை நேற்று பாய்ச்சியது.
அந்த ஏவுகணைகள் அனைத்தையும் உக்ரேனியத் தற்காப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
ரஷ்யாவிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டபோது கியவ் நகரமெங்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
உக்ரேனிய மக்களைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கியவ் நகரத்தின் ராணுவப் பிரிவுத் தலைவர் திரு செர்ஹி போப்கோ கூறினார்.
ஆனால் இத்தாக்குலில் உக்ரேனியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றார் அவர்.
ரஷ்யா நேற்று அதன் வெற்றி தினத்தைக் கொண்டாடியது. 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் வகையில் இந்த கொண்டாட்டம் ரஷ்யாவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உலகம் திருப்புமுனையை எதிர்கொள்வதாக அவர் கூறினார். ரஷ்யாவின் எதிர்காலத்துக்காக போராடி வருவதாக அவர் தெரிவித்தார்.
"ரஷ்யாவுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டுள்ளது. அனைத்துலகப் பயங்கரவாதத்தை முறியடித்துள்ளோம். டோன்பாஸ் மக்களைப் பாதுகாப்போம்," என்று மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் அதிபர் புட்டின் தெரிவித்தார்.
இதற்கிடையே, ரஷ்ய எல்லை அருகில் உள்ள பெல்கொரோட் பகுதியில் உக்ரேனியப் படைகள் பீரங்கித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. நேற்று முன்தினம் உக்ரேன் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் மாண்டனர். அதுமட்டுமல்லாது, அங்குள்ள பல வீடுகள் சேதமடைந்தன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பொதுமக்களைக் குறிவைக்கவில்லை என்றும் ரஷ்யாவின் ராணுவக் கட்டமைப்பை அழித்து நிலவழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரேன் கூறியது.
இந்நிலையில், உக்ரேன்-ரஷ்யா போரை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்று ஐநா தலைவர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
போரில் வெற்றி பெற முடியும் என்று இருதரப்பினரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதால் யாரும் பேச்சுவார்ததைக்குத் தயாராக இல்லை என்றார் திரு குட்டேரஸ்.

