இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மூன்று நாள்களாக தொடரும் ஆர்ப்பாட்டங்களையும் வன் முறைச் சம்பவங்களையும் ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
அதோடு இம்ரான் கான் கட்சி யைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆசாத் உமர், ஷா மஹ்முட் குரேஷி போன்ற மூத்த தலைவர்கள் வன்முறைகளைத் தூண்டியதற்காக கைது செய்யப்பட்டனர் என்று இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க் கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக கைப்பேசி இணையத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ராணுவக் கட்டடங்களுக்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து ஆர்ப்பரித்தனர். லாகூரில் உள்ள ராணுவ ஜெனரலின் வீட்டையும் அவர்கள் சூறையாடினர்.
இதர மாநிலங்களில் உள்ள அரசாங்கக் கட்டடங்களையும் தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் 220 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மோதல்களில் குறைந்தது எட்டுப் பேர் உயி ரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி 'த இண்டியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்தது.
இதற்கிடையே நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட ராணுவத்தை களமிறக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து நேற்று இஸ்லாமாபாத் நகரை நோக்கி ராணுவம் சென்றது. திரு கானின் சொந்த மாநிலமான பஞ்சாபில் மட்டும் வன் முறையில் ஈடுபட்டதற்காக 1,300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்ற 2002 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு அவர் மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக விற்றதும் அவற்றில் அடங்கும். கைது செய்யப்பட்ட இம்ரான் கான் எட்டு நாள் காவலில் வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பேசிய பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பிடிஐ தலைவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் இருப்பதாகவும் அவற் றின் அடிப்படையில் என்ஏபி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

