பெர்லின்: உக்ரேனுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஜெர்மனி ஆக அதிகமாக 2.7 பில்லியன் யூரோ (S$3.95 பில்லியன்) பெறுமானமுள்ள ஆயதங்களை அனுப்பி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்குத் தேவை இருக்கும் வரை மேலும் பல ஆதரவுகள் வழங்கப்படும் என்றும் அது உறுதி அளித்தது.
உக்ரேனுக்கு ஜெர்மனி அனுப்பிவைக்க இருக்கும் ஆயுதங்களில் 30 லெபர்ட் 1 கவசவாகனங்கள், எதிரிகளின் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய 15 ஜெபார்ட் கவசவாகனங்கள், உளவுப் பார்க்க பயன்படுத்தப்படும் 200க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் ஆகியவை அடங்கும்.
இந்தத் தகவலை ஜெர்மன் தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்டது.
"இந்த மிக மோசமான, சட்டவிரோத போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் போர் கூடிய விரைவில் முடியும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே, தேவை இருக்கும் வரை ஜெர்மனி உதவி செய்யும்," என்று ஜெர்மன் தற்காப்பு அமைச்சர் பாரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, உக்ரேனிய அதிபர் வொலோடிமியர் ஸெலன்ஸ்கி நேற்று இத்தாலியத் தலைநகர் ரோம் சென்றடைந்தார்.
அதிபர் ஸெலன்ஸ்கியை வரவேற்க ரோமில் வாழும் உக்ரேனியர்கள் சாலை நெடுகிலும் மிகுந்த ஆர்வத்துடனும் உக்ரேனிய கொடியை ஏந்திக்கொண்டும் காத்துக்கொண்டிருந்தனர். உக்ரேனுக்கு ஆதரவான வாசகங்களைக் கொண்ட பதாகைகளையும் அவர்கள் ஏந்தினர்.
இத்தாலியத் தலைவர்களுடன் கலந்துரையாடிவிட்டு பிறகு
வாத்திக்கன் நகருக்குச் சென்று போப்பாண்டவரை திரு ஸெலன்ஸ்கி சந்தித்துப் பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

