அங்காரா: துருக்கியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தத் தரப்பிற்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.
அதிபர் ரிசெப் தயிப் எர்டுவான் அவரை எதிர்த்துக் களமிறங்கிய கெமால் கிளிச்டொரோலுவைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. தேர்தலில் 50 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றால்தான் அதிபர் பதவியைப் பிடிக்க முடியும் என்ற நிலையில் திரு எர்டுவான் ஏறக்குறைய 49 விழுக்காட்டு வாக்குகளையும் திரு கெமால் ஏறத்தாழ 45 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
துருக்கியில் நான்கு தவணைகளாக 20 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியுள்ள திரு எர்துவான் ஐந்தாம் தவணையிலும் ஆட்சி செய்வேன் என்கிறார். திரு கெமால், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் தாம் வெற்றி பெறுவது உறுதி என்கிறார்.
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

