அமெரிக்கா: அமெரிக்கப் பேராசிரியர் டாக்டர் ஜோசஃப் டிட்டுரி கடலுக்கடியில் நீண்ட நாள் வசித்த புதிய சாதனையை சென்ற சனிக்கிழமை ஏற்படுத்தியுள்ளார்.
ஜூல்ஸ் கடலடித் தங்குவிடுதியில் அவர் தங்கியிருந்த 74ஆம் நாள் அது.
ஃபுளோரிடாவில் ஒன்பது மீட்டர் ஆழத்தில் உள்ள உப்பங்கழித் தீவு ஒன்றில் அமைந்துள்ளது முக்குளிப்பாளர்களுக்கான அவ்விடுதி.
கடலடியில் 100 நாள்கள் தங்குவது டாக்டர் ஜோசஃபின் திட்டம். அங்குள்ள அதீத அழுத்தத்தை மனித உடல் எவ்வாறு கையாள்கிறது என அறிவது அவரது ஆய்வு.
அங்கிருந்தபடியே பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையத்தில் வகுப்பு எடுக்கும் அவரை நண்பர்கள், குடும்பத்தினர், மருத்துவர்கள் அவ்வப்போது சென்று பார்த்து வருகின்றனர்.
அன்றாடம் ஒரு மணி நேரம் தனது இருப்பிடத்தைச் சுற்றி முக்குளிக்கும் அவர் மேற்பரப்புக்கு வருவதே இல்லை. கடலடியில் வசிப்பது மிகவும் பிடித்துள்ளது என்று கூறும் டாக்டர் ஜோசஃப், சூரியனைப் பார்க்க முடிவதில்லை என்பது மட்டுமே தனது வருத்தம் என்கிறார். கடலடி ஆய்வைத் தொடங்குமுன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது அன்றாடக் கடமைகளில் ஒன்று.

