வெல்லிங்டன்: நியூசிலாந்தின் ெவல்லிங்டன் நகருக்கு அருகில் 'லோஃபர்ஸ் லாட்ஜ்' என்ற தங்குவிடுதியில் திங்கள்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது அறுவர் மரண
மடைந்துள்ளனர்.
மேலும் 11 பேரைக் காணவில்லை என்றும் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்
கூடும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 'லோஃபர்ஸ் லாட்ஜ்' ஆக மேல் மாடியில் திங்கள் நள்ளிரவு தீ ஏற்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீயால் கட்டடத்தின் கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கினர்.
அந்தக் கட்டடத்தில் கிட்டத்தட்ட 90 பேர் தங்கியிருந்த நிலையில், தீயை அணைக்க 80 தீயணைப்பு வீரர்களும் 20 கனரக வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காவல் துறை, அவசர மீட்புப் படையைச் சேர்ந்தோர் 52 பேரை மீட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் 15 பேருக்கு சம்பவ இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டடத்தின் கூரையில் சிக்கி செய்வதறியாது இருந்தவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் கனரக வாகனத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஏணியின் உதவியுடன் மீட்டதாக அவசர மீட்புப் படை தளபதி பிரண்டன்நாலி தெரிவித்தார்.
"தீ மூண்ட இடத்துக்கு மேலே, கூரைப் பகுதியில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக காப்பாற்றினர்,
"வேறு வழியில்லை, எங்கள் குழுவினர் காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் அழிவது நிச்சயம்.
"மீட்புப் படையினர் காப்பாற்றியதால்தான் பலர் தற்பொழுது நடமாடிக்கொண்டிருக்கினர்," என்று ரேடியோ நியூசிலாந்துக்கு அளித்த பேட்டியில் திரு நாலி விளக்கினார்.
தீயை அணைக்க உதவும் நீர்த் தெளிப்பு வசதியும் இல்லை, தீ எச்சரிப்பு கருவியும் உடனடியாக வேலை செய்யவில்லை என்று திரு நாலி தெளிவுபடுத்தினார்.
தங்குவிடுதியில் இருந்த கிறிஸ் எனப் பெயர் கொண்ட ஒருவர், தனது அறையில் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க தான் தனது அறையை விட்டு தவழ்ந்து வெளியேறியதாக நியூநிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றிக் கருத்துரைத்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், இது ஒரு பெரும் துயர் சம்பவம் என்று கூறினார்.
அந்தத் தங்குவிடுதியில் பல பகுதிநேர ஊழியர்கள் தங்கியிருந்ததால் தீ மூண்ட சமயம் தங்குவிடுதியில் இருந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை என்று நியூசிலாந்துப் பிரதமர் கூறினார்.
"இந்தத் தீச் சம்பவம் பத்தாண்டுகளில் ஒரு முறை வரக்கூடிய தீச் சம்பவம்.
"இது மிகவும் மோசமான சிம்மசொப்பனம்," என்று நியூசிலாந்து தீயணைப்பு, அவசர உதவிப் படைத் தலைவர் நிக் பயட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
"இதில் தொடர்புடைய அனைவருக்கும் இது ஒரு பெரும் துயரமான சம்பவம்.
"இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் தீயணைப்புப் படையினர் நம்பமுடியாத அளவுக்கு தங்கள் கடமையை ஆற்றினர். அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துக்கொண்டார்.

