ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஊழலால் அரசாங்கத்துக்கு அரை பில்லியன் டாலருக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிபர் ஜோக்கோ விடோடோ அமைச்சரவையில் தொடர்பு, தொழில்நுட்ப அமைச்சராக ஜானி ஜி பிளேட் 5வது இடத்தில் உள்ளார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.
"ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு இணையத் தொடர்பு வசதிகளைக் கொண்டுவருவதற்காக ஆயிரக்கணக்கான தகவல் தொடர்பு கோபுரங்களைக் கட்டுவதற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதில் திரு ஜானி ஈடுபட்டிருந்தார்," என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. அப்போது அமைச்சராக இருந்த ஜானி முறைகேடாக நிதியைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனீசியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் ஊழல் சட்டத்தை அவர் மீறியிருப்பதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
திரு ஜானி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதால் அவரது அமைச்சின் சேவைகள் பாதிக்காது என்று தொடர்பு, தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்தது. இந்த நிலையில் திரு ஜானியின் கைது எதிர்பாராதது என்று அதிபர் ஜோக்கோ விடோடோ அலுவலகம் கூறியது.

