வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆசிய பயணத்தின் ஒரு பகுதியைக் குறைத்து கொண்டுள்ளார்.
உள்ளூரில் கடன் வரம்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினியா பயணத்தை அவர் ரத்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் ஜப்பானின் ஹிரோஹிமா நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கும் மூன்று நாள் ஜி-7 உச்சநிலை மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெறும் சந்திப்புக்காக அவர் நாடு திரும்புவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அவசர உள்ளூர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதிபர் பைடனின் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகப் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை குறையும் என்றும் நீண்ட காலத்திற்கு உலகளாவிய தலைமையை செலுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
"வெளிநாட்டுப் பயணங்களைவிட உள்ளூர் நிதிப் பிரச்சினைக்கு அதிபர் பைடன் முன்னுரிமை அளிப்பது அவசியம். அமெரிக்க அரசியலை நன்கு அறிந்தவர்கள் அவரது முடிவை புரிந்துகொள்வார்கள்," என்று ஆசியா-பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்புத் தலைவர் பேட்ரிக் கிரோனின் தெரிவித்தார்.

