கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மாபெரும் கடைத்தொகுதியான உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் நன்கு பிரபலமான மிட் வேலி மெகாமால் கடந்த புதன்கிழமை (17.5.2023) தீப்பற்றிக்கொண்டது.
தீயினால் சேதமடைந்த இடங்களைச் சரிசெய்து நேற்று மீண்டும் செயல்படத்தொடங்கியதாக அங்கு பணிபுரிந்து வரும் 38 வயது ஆடவர் ஒருவர் தெரிவித்தார். கடைத்தொகுதி தீப்பற்றுவதற்கு முன்தினம்தான் அங்கு, தீப்பிடித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார்.
"கடைத்தொகுதி பாதுகாப்பாக உள்ளது என்றும் அதை வழக்கம்போல் இயக்க அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்துவிட்டது," எனவும் கடைத்தொகுதி நிர்வாகம் தனது ஃபேஸ்புக் இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது.
"தீப்பற்றியதற்குப் பின், முழுமையான விசாரணையை தெனகா நேசனல் பெர்ஹாட் அமைப்பும் மலேசிய தீயணைப்பு மற்றும் துயர்துடைப்பு அமைப்பும் மேற்கொண்டன. அதன்பின் பாதுகாப்புக் குறித்து எவ்வகையிலும் அச்சப்படத் தேவையில்லை என்று கடைத்தொகுதியைத் திறக்க அனுமதியளித்தது என்று அவர் கூறினார். இந்த அவசர காலத்தில் கடைக்காரர்கள், வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள், அரும்பாடுபட்டு தீயைக் கட்டுப்படுத்திய தீணையனைப்புப் படை வீரர்கள் ஆகியோர் நிலைமையை நன்கு புரிந்துகொண்டு இந்தச் சவாலை முறியடிக்க எங்களுடன் துணை நின்றனர். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என தனது ஃபேஸ் புக் வாயிலாக தெரிவித்துக்கொண்டது கடைத்தொகுதி நிர்வாகம்.

