பகோட்டா: கொலம்பியாவில் அமேசான் பகுதியில் மே 1ஆம் தேதி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் மூன்று பேர் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த நான்கு குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் மீட்புப்பணியினர் தவித்துவந்தனர். அதையடுத்து கொலம்பிய ராணுவம் நூறு வீரர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.
4, 9, 13 வயதுகளில் மூன்று குழந்தைகள் மற்றும் 11 மாதக் குழந்தையுமே காணாமல் போனவர்கள்.
அடர்ந்த காட்டில் 40 மீட்டர் உயரமுள்ள அடர்த்தியான மரங்கள், அச்சுறுத்தும் காட்டு விலங்குகள், தொடர்ச்சியான கனமழை என பல இன்னல்களையும் தாண்டி மூன்று ஹெலிகாப்டர்களின் உதவியால் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர் ராணுவத்தினர். அப்போது, காட்டுக்குள் ஒரு சிறிய கூடாரம் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
சிறுசிறு குச்சிகளை ஊன்றி அமைக்கப்பட்டிருந்தது அந்தக் கூடாரம். அந்தக் கூடாரத்தில்தான் சிறுவர்கள் இருக்கவேண்டும் என்று யூகித்தனர் ராணுவ வீரர்கள். அதையடுத்து, அக்குழந்தைகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து பழங்குடியினர் உதவியுடன் அவர்களை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். அந்தக் குழந்தைகள் இப்போது நலமாக உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

