ஜெனிவா: அதிகரித்துவரும் வெப்பநிலையால், உலகச் சுகாதார இலக்குகளை எட்ட மேலும் சிரமமாகி வருகிறது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பருவநிலை தொடர்பான மரணங்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தூய்மையான காற்று, தண்ணீர், மண் முதல் உணவு முறை, வாழ்வாதாரம் வரை, சுகாதாரம் தொடர்பான அனைத்து அம்சங்களும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன" என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அதன் வருடாந்திர உலகச் சுகாதாரப் புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டது.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், சுகாதார அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் உலகளாவிய சுகாதாரத்தில், பல்லாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பலவீனமடையும் என்றும் அதன் கூட்டுக் கடப்பாடுகள் முரண்படும் என்றும் நிறுவனம் கூறியது. ஆப்பிரிக்க நாடுகள், ஏழ்மையான தேசங்கள், சிறிய தீவுகள் ஆகியவை வரலாற்று ரீதியாக, உலகளவில் கரியமில வாயு வெளியேற்றத்திற்கு மிகக் குறைந்த அளவில் பங்களித்தாலும், அவை பருவநிலை மாற்றத்தின் மிகப் பெரிய சுகாதார விளைவுகளை எதிர்நோக்குவதாக நிறுவனம் தெரிவித்தது.
மாறிவரும் வெப்பநிலையாலும் மழை பொழிவாலும் கொசுக்கள், உண்ணிகள், எலிகள் ஆகியவற்றால் உண்டாகும் நோய்கள் புதிய வட்டாரங்களில் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்நோய்களால் ஏற்கெனவே ஒவ்வோர் ஆண்டும் 700,000 பேருக்கும் மேல் பலியாகின்றனர். சில வட்டாரங்கள் கடுமையான வறட்சியையும் வேறு சில வட்டாரங்கள் வெள்ளம், பூசல் ஆகியவற்றையும் எதிர்நோக்கும் வேளையில், 'மார்பர்க்' கிருமி, காலரா, போலியோ நோய் உள்ளிட்ட நோய்களின் பரவலால், ஏற்கெனவே இருக்கும் குறைவான வளங்கள், சுகாதார ஊழியரணிகள், உள்கட்டமைப்புகள் முதலியவை நெருக்குதலுக்கு உள்ளாகின்றன.

