சோல்: 'எவர்லாண்டு' கேளிக்கைப் பூங்காவுக்கு இரவு முழுவதும் 11 மணி நேரம் நடந்த நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இருவரின் கதை, அண்மையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டதையடுத்து அது பரவலானது.
அந்தக் கடினமான பயணத்திற்குக் காரணம்? 70,000 வோன் ($71) வெகுமதிக்குத் தங்கள் நண்பர்கள் பந்தயம் கட்டியிருந்ததே.
மே 12ஆம் தேதி, கியோங்கி மாநிலத்தின் யொங்கின் பகுதியில் அந்த இரண்டு பதின்மவயது சிறுவர்களும் உலாவிக்கொண்டு இருந்ததை அங்குள்ள குடியிருப்பாளர்கள் கண்டதாக, சமூக ஊடகங்களில் வெளியான பதிவு ஒன்றில் தெரியவந்தது.
தென்கொரியாவில் ஆகப் பெரிய, ஆகப் பிரபலமான கேளிக்கைப் பூங்காவான 'எவர்லாண்டை' சென்றடைய, இரவு முழுவதும் 44 கிலோமீட்டர் தூரம் நடந்ததாக அவர்கள் கூறினர். தாங்கள் காணாமல்போனதாகவும் சரியான பாதை தேவைப்பட்டதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
குடியிருப்பாளர்களில் ஒருவர், அவர்களைத் தமது வீட்டிற்கு அழைத்துச்சென்று, உணவு கொடுத்து, வாகனத்தில் கொண்டுசென்றுவிட முன்வந்தார்.
ஆனால், அதனை நிராகரித்த அந்தச் சிறுவர்கள், 'எவர்லாண்டு'க்கு நடந்துசென்றால் மட்டுமே தங்கள் நண்பர்கள் தங்களுக்கு 70,000 வோன் கொடுக்க உறுதிகூறியதாகத் தெரிவித்தனர்.
அந்தப் பணம் அவர்கள் இடையே பிரிக்கப்படுமா அல்லது அவர்கள் ஒவ்வொருவருக்கும் 70,000 வோன் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அந்தக் குடியிருப்பாளர் அவர்களைக் கடுமையாகத் திட்டி, தங்கள் பெற்றோரையும் ஆசிரியர்களையும் அழைக்குமாறு கூறினார். இருப்பினும், அந்தச் சிறுவர்கள் சரியான வழியில் நடந்தவாறே, 'எவர்லாண்டு'க்கு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

