பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பழைய ஈ.பி.எஃப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் கட்டடத்தில் மீண்டும் தீ மூண்டது.
பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் காசிங்கில் இடம்பெற்று உள்ள அந்தக் கட்டடம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீச்சம்பவத்தில் சேதமடைந்தது.
இந்த நிலையில் மீண்டும் அதே கட்டத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 10.35 மணியளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்தது.
உடனே பெட்டாலிங் ஜெயா, தாமான்சாரா, பென்சாலா, பூச்சோங் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மலேசியகினி தகவல் தெரிவித்தது.
தீயை அணைக்கும் முயற்சியில் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவும் உதவி செய்தது.
"கட்டடத்தின் நான்காவது, ஐந்தாவது மாடியில் தீ மூண்டது. தீயணைப்பாளர்கள் 11.00 மணிக்குள் வெற்றிகரமாக தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்," என்று சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் உதவி இயக்குநர் ஹாஃபிஷாம் முஹமட் நூர் தெரிவித்தார்.
ஊழியர் சேமநிதி வாரியம் (ஈ.பி.எஃப்), மலேசியாவின் ஆகப்பெரிய ஓய்வூதிய நிதி அமைப் பாகும். தற்போது அந்தக் கட்டடத்தில் யாரும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஈ.பி.எஃப் கூறியது.
தீச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அது சொன்னது.
பசிஃபிக் சீனியர் லிவிங் என்ற அமைப்புடன் முப்பது ஆண்டு ஒப்பந்தத்தில் ஈ.பி.எஃப் கையெழுத்திட்ட பிறகு 2024ஆம் ஆண்டில் அந்தக் கட்டடம் மீண்டும் திறக்க திட்டமிடப் பட்டிருந்தது.

