உள்கட்டமைப்பு, வர்த்தகம் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள்
ஷாங்காய்: ரஷ்யப் பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் (படம்) அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் ஷாங்காய் நகருக்குச் சென்ற அவரை சீனாவுக்கான ரஷ்யத் தூதரும் மாஸ்கோவிற்கான பெய்ஜிங்கின் உயரிய அரசதந்திரியும் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ரஷ்யப் பிரதமர் தமது சீனப் பயணத்தின்போது சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பார் என்று கூறப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே உள்கட்டமைப்பு, வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய-சீன வர்த்தகக் கருத்தரங்கில் பிரதமர் மிஷுஸ்டின் கலந்துகொள்வார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்தது. ஷாங்காயில் உள்ள எண்ணெய், எரிவாயு ரசாயன ஆய்வுக் கழகத்தைப் பார்வையிடுவதோடு ரஷ்ய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவார் என்றும் கூறப்பட்டது.
தடை விதிக்கப்பட்ட ரஷ்யப் பெருவர்த்தகர்கள் பலருக்கும் கருத்தரங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் ரஷ்யத் துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக்கும் அதில் கலந்துகொள்கிறார் என்று புளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்தரங்கு நேற்று ஷாங்காய் நகரில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தில் நடைபெற்றதை ஒட்டி அந்தப் பகுதியில் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
கருத்தரங்கிற்குப் பிறகு பிரதமர் மிஷுஸ்டின் பெய்ஜிங் சென்று சீன அதிபர் ஸியைச் சந்திப்பார். சீனப் பிரதமர் லி சியாங்கையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்று ரஷ்ய அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
உக்ரேன் மீதான போருக்குப் பிறகு ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடை விதித்த நிலையில் சென்ற ஆண்டு சீனா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யத் தொடங்கியது.
போர் தொடரும் நிலையில், இரு நாடுகளும் அவற்றுக்கு இடையிலான பொருளியல் ஒத்துழைப்பையும் அரசதந்திர உறவுகளையும் அதிகரித்து வந்துள்ளன. அவற்றுக்கு இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவம் மேலும் அணுக்கமாகி உள்ளது.
ரஷ்ய-உக்ரேனியப் போர் தொடர்பில் சீனா மாஸ்கோவை இதுவரை கண்டிக்கவில்லை. தடைகளால் அனைத்துலக நாடுகளிடமிருந்து ரஷ்யா அதிகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சீன-ரஷ்ய உறவில் பெய்ஜிங்கின் கையே ஓங்கி இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

