பேங்காக்: தாய்லாந்தின் பிச்சிட் வட்டாரத்தில் நேற்று முன்தினம் பள்ளி ஒன்றின் விளையாட்டுத் திடலில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் மாண்டனர். அவர்களில் நால்வர் சிறுவர்கள்.
மூன்று பக்கம் சுவர்களும் மேற்கூரையும் கொண்டிருந்த கட்டடம் (படம்) புயல் காற்றால் முற்றிலும் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். உயிரிழந்த சிறுவர்கள் ஆறு வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். சம்பவத்தின்போது அச்சிறுவர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் அவ்விடத்தில் விளையாடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் புயல் வீசியதாகவும் அதைத் தொடர்ந்து கனமழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியதால் கூரை திடீரென்று இடிந்து விழுந்ததாகவும் கூறப்பட்டது. உயிரிழந்த மற்ற மூவரில் இருவர் பெற்றோர். ஒருவர் அக்கட்டடத்தின் பராமரிப்பாளர். சம்பவத்தில் மேலும் 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. புயலால் சாம் நாம் மாவட்டத்தில் சில வீடுகள் சேதமுற்றதாகக் காவல்துறை கூறியது. தாய்லாந்தில் பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அடுத்த சில நாள்களில் கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
படம்: சால்வேஷன் மீட்புச் சங்க ஃபேஸ்புக்

