கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், பல தட வாகனப் போக்குவரத்து சாலை வரி வசூல் முறையை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுப்பணித் துறை துணை அமைச்சர் அப்துல் ரஹ்மான் முகமது கூறியிருக்கிறார்.
2025ல் அமலாகவிருக்கும் அம்முறையில் கட்டணம் செலுத்துவதற்கான தெரிவுகள் பன்முகப்படுத்தப்படும் என்றார் அவர். தற்போது ஒரே கட்டணச் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
புதிய முறையின்கீழ் சாலை வரிக் கட்டண முகப்பில் செல்லும்போது போதிய தொகை இல்லாமல் சிரமப்பட நேரிடாது.
'ஆர்எஃப்ஐடி' கட்டணம் செலுத்தும் முறையில் ஏற்படும் சிக்கல்களால் வரி வசூல் முகப்புகளில் வாகன நெரிசல் ஏற்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய துணையமைச்சர் வாகனப் போக்குவரத்தை எளிதாக்க புதிய முறை உதவும் என்று கூறினார்.
தற்போது வாகன நெரிசலைத் தவிர்க்க, வாகனமோட்டிகள் தங்களின் 'டச் அண்ட் கோ' அட்டை, 'இவாலட்' ஆகியவற்றில் போதிய தொகை இருப்பதை உறுதி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

