லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் அரசு வசிப்பிடமான டெளனிங் ஸ்திரீட்டின் நுழைவாயில் கதவுகளின்மீது ஒருவர் வாகனத்தை மோதியிருந்தார். அச்சம்பவத்தைப் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தவில்லை என்று லண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. அன்றே சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட வாகனம் சாலையைக் கடந்து டெளனிங் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் காட்சி பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளியில் இடம்பெற்றது. வாகனம் மெதுவாக ஓட்டப்பட்டதும் தெரிந்தது.
டெளனிங் ஸ்திரீட்டின் முக்கிய நுழைவாயிலின் கதவு சேதமடைந்ததாகத் தெரியவில்லை.
சந்தேக நபர் 50 வயதைத் தாண்டிய வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆடவர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார். ஆகக் கடைசி நிலவரப்படி டெளனிங் ஸ்திரீட்டுக்கு வெளியே சிறிய தடுப்பு இன்னும் போடப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் காவல்துறை குறிப்பிட்டது.
யாரும் காயமடையவில்லை. சட்டவிரோதமான முறையில் சேதம் விளைவித்தது, அபாயம் ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தை ஓட்டியது ஆகியவற்றின் தொடர்பில் சம்பவ இடத்தில் ஓர் ஆடவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை முன்னதாகத் தெரிவித்தது. திரு ரிஷி சுனக்கின் அலுவலகம் கருத்து வெளியிடவில்லை.
சம்பவம் நேர்ந்தபோது பல சிறுவர்கள் அங்கிருந்து ஓடிச் சென்றதாக டெளனிங் ஸ்திரீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறினார். வாகனத்தின் உள்ளே இருந்தவரைக் காவல்துறையினர் துப்பாக்கி முனையில் வைத்திருந்ததாகவும் அவர் சொன்னார்.

