பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தனது நாயை மீட்கும் முயற்சியில் 85 வயது ஆடவர் ஒருவர் மரணமடைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மலேசியாவின் பெந்தோங் நகர விலங்குக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் லாவ் செய் கியூ எனும் ஆடவரின் நாயைப் பிடித்து செல்ல முயன்றனர். அவர்களுடன் ஏற்பட்ட மோதலில் திரு லாவ் மாண்டதாகக் கருதப்படுகிறது.
பெந்தோங் நகரின் தாமான் சாகா பகுதியில் தனது இரண்டு மாடி வீட்டில் நாயுடன் வசித்து வந்தார் திரு லாவ். அவரின் நாய்க்கு ஏழு வயது.
சம்பவம் கடந்த புதன்கிழமையன்று மாலை ஐந்து மணிக்கு நிகழ்ந்ததாக திரு லாவின் அண்டை வீட்டாரான 55 வயது சான் போ லூங் தெரிவித்தார். அப்போதுதான் சில விலங்குக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அவர்கள் இருந்த குடியிருப்பு வட்டாரத்திற்கு வந்ததாக அவர் கூறினார். அந்த அதிகாரிகள் பெந்தோங் நகராட்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

